பொதுவாக நாம் சிறுவர்களாக இருக்கும்போது, நம் வயதைப் பொறுத்து நமது எண்ண ஓட்டங்கள் சில மணி நேரங்களில் இருந்து சில மாதங்கள் வரையானதாகவே இருக்கும். அதை தாண்டி வருடக்கணக்கில் எல்லாம் நாம் எதையும் சிந்திப்பதில்லை.
பிறகு ஒரு இருபது, இருபத்தைந்து வயதை எட்டும் போது அடுத்துவரும் சில வருடங்கள் வரை நாம் சிந்திப்போம்.
ஒரு முப்பது, முப்பத்தைந்து வயதை எட்டி குடும்பம், பிள்ளை, குட்டி என்று ஆனபிறகு நமது சிந்தனைகள் ஒரு ஐந்திலிருந்து பத்து வருடங்களை எடை போடுபவையாக அமையும்.
அதன் பிறகு ஒரு நாற்பது, நாற்பத்தைந்து வயதை தாண்டிய பிறகுதான் தலைமுறை கணக்குக்களை எல்லாம் உள்ளடக்கிய ஒரு தூர நோக்கும் இயல்புக்கே நாம் வந்து சேருவோம்.
இது மனிதராகப் பிறந்த யாவருக்கும் பொதுவான ஒரு அநுபவக் கூறு. மனிதனின் இந்த ஒற்றைக் குணாதிசத்தினால்தான், வயதான பெறியோர்களின் அறிவுரையை சிறு வயதுடையவர்களும், உன்னைப் போன்ற இளைஞர்களும் கேட்டு நடக்க வேண்டும் என்பது.
காரணம் உங்கள் வயதில் உங்களால் ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் பார்க்க முடியும், சிந்திக்க முடியும். அதை தாண்டி பார்ப்பதற்கான அனுபவமோ, மன முதிர்ச்சியோ, இயல்போ உங்களிடம் இருக்காது.
"ஓடுகிற பாம்பை காலால் மிதிக்கிற வயதில்" உங்களுக்கு எல்லாமே விளையாட்டாய் தான் தெரியும். எந்த விஷயத்திற்கும் நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து நடந்து கொள்ள மாட்டீர்கள். ஆனால் கறு நாகம், ராஜ நாகம், கட்டு விரியன், கண்ணாடி விரியன், மலைப் பாம்பு என்று பொல்லாத பாம்புகளில் இருந்து சாரைப் பாம்பு, பச்சைப் பாம்பு, தண்ணிப் பாம்பு என்று 'பிஸ்கோத்து'பாம்புகள் வரை எல்லா பாம்புகளையும் பார்த்து பழக்க பட்டவர்கள் உங்களைச் சுற்றியுள்ள பெரியவர்கள்.
3). தனி மனித வழிகாட்டு பட்டியல்
உன் வயதில் பொருள் தேடும் பொருட்டு நான் என் தாய், தந்தையர், உற்றார், உறவினர் யாவரையும் நான் வளர்ந்த் சிற்றூரில் விட்டு விட்டு வெகு தூரத்தில் இருந்த மாநகரங்களில், ஒரு தனிமர வாழ்க்கையை வாழ்ந்தேன்.
அப்படி பட்ட கால கட்டத்தில் யார் அறிவுரையும் இன்றி, பெரியவர்களின் எந்த ஈடுபாடும் இல்லாமல்,தனியாக நான் பல முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைகளை சந்தித்திருக்கிறேன்.
இப்படிச் சூழ்நிலைகளில் எல்லாம் "நாம் எடுக்கிற இந்த முடிவு சரியா, தவறா? நாளை இந்த முடிவின் வெளிப்பாடு எப்படி அமையும்? இதை நினைத்து நாம் வருத்தப் படக்கூடிய சூழ்நிலை பிறகு ஏற்படுமா?"என்று பலவாறு குழம்பிய நிலையில் பல முறை திசை தெரியாது தவித்தும் இருக்கிறேன்.
நான் என் இளமைப் பருவத்தில் எதிர் கொண்ட அதே குழப்பம் இன்றும் இளைஞர்களுக்கு இருப்பதை பார்க்கிறேன். "தனி மனித அளவில் ஒரு இளைஞன் எப்படி வெவ்வேறு சுழ்நிலைகளில் முக்கிய முடிவுகளை எடுப்பது ? தடம் புரண்டு விடாமல் வாழ்க்கையை துணிகரமாக நடத்திச் சென்று அதை கடைசிவரை அவன் அர்த்தமுள்ளதாக ஆக்கிகொள்வது எப்படி ?" என்கிற கேள்விகளுக்கு இன்றும் பலருக்கு சரியான பதில் கிடைப்பதில்லை.
அந்த வகையில் என் தனி மனித சிந்தனை இதுதான்:
உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு எவை எவை முக்கியமானவை, எவையினால் உங்களுக்கு மன சந்தோஷம் ஏற்படும், எது எது நடந்தால் (அல்லது நடக்கா விட்டால்) உங்கள் மனம் நிலையான அமைதி, குதூகலம், இன்பம் எல்லாம் பெரும், என்பதை முதலில் ஆர அமர ஆழமாக யோசித்து முடிவு செய்து கொள்ளுங்கள்.
இது வெவ்வேறு மனிதருக்கு வெவ்வேறு முடிவுகளைக் கொண்டுவரும் ஒரு தனிமனித ஆய்வு. எனக்கு முக்கியம் என்று படுவது, உங்களுக்கு முக்கியமாக பட வேண்டும் என்று அவசியமல்ல.
ஒவ்வொருவர் இயல்பை பொறுத்து, அவரவர் கடந்து வந்த வாழ்க்கைப் பாதைகளைப் பொறுத்து 'எது முக்கியம்' என்பது வெவ்வேறாக நிர்ணயமாகும். அதன் பிறகு நீங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு முடிவை எடுக்கும்போதும் 'இது இது எனக்கு முக்கியம்' என்று நீங்கள் ஏற்கனவே நிர்ணயித்து வைத்துள்ள பட்டியலோடு, எடுக்கப் போகும் முடிவை ஒத்து பார்த்து, அந்த பட்டியலில் இருப்பவற்றுக்கு உகந்த வழியில் உங்கள் முடிவுகளை எடுத்து விடுங்கள்.
தவறு செய்து விட்டோம் என்ற குற்ற உணர்வு உங்களை பிறகு வாட்டாமல், வாழ்க்கையை கொண்டு செல்ல இதுவே சிறந்த வழி. இதற்கான நடைமுறை உதாரணத்தை என்னை மையமாக வைத்து ஒரு சுய ஆய்வு செய்து பார்க்கிறேன்.
"என் வாழ்வில் எது எது இருந்தால் எனக்கு நிலையான அமைதி, குதூகலம், இன்பம் எல்லாம் இருக்கும் ?"என்று நான் ஒரு பட்டியலை அமைத்தால், அது இப்படித்தான் இருக்கும் :-
1). என் மூதாதையர் பார்த்தால் என்னை மெச்சும் வகையில், சுற்றத்தையும், நட்பையும் ஆதரித்த, அனைத்த ஒரு பெரும்போக்கான வாழ்க்கையை வாழ்தல்.
2). என் பிள்ளைகளை சிறந்த படிப்புக்களை படிக்க வைத்து, அவர்களை ஆழ்ந்த குடும்ப, சமுதாய உணர்வு கொண்ட, சிந்தித்து செயல்படும் புத்திசாலிகளாகவும், குதூகல இயல்பு கொண்ட நல்ல மனிதர்களாக உருவாக்குதல்.
3). பிரச்சனை அற்ற நடுத்தர வாழ்க்கை நிலையோடு கடைசி வரை யாரையும் எதிர்பாராத வகையில் குடும்பத்தை கொண்டு செல்ல தேவையான பணத்தை சம்பாதித்து விடுதல்.
4). சுற்றம், நட்பு, குடும்பம், பிள்ளை, குட்டி என்று சந்தோஷமான குதூகலமான சூழலுக்கு நடுவில் என் மனைவியும், நானும் எங்களது குடும்ப வாழ்க்கையை அமைத்து கொள்ளுதல்.
5). குடும்பத்தில் உள்ள யாவரும் கடைசிவரை நோயற்ற உடல் கூறோடு வாழ்வதற்கு உகந்த வழியில்,உடல் நல விஷயங்களில் கண்டிப்பாக இருத்தல்.
இதுதான் எனக்கென்று நான் போடும், போட்டு கொண்ட 'வாழ்க்கை வழி காட்டு பட்டியல்'. இந்த மாதிரி நீங்களும் ஒரு பட்டியலைப் போட்டு பாருங்கள், எளிதில் விடை காண முடியாத பல விஷயங்களுக்கு உங்களுக்கு விடை கிடைக்கும். வாழ்க்கையில் 'இது தான் பாதை, இது தான் பயணம்' என்பதும் தெளிவாக புரிந்துவிடும்.
ஆனால், பட்டியலை போடுவதற்கு முன்பு ஆழமாக யோசியுங்கள். ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு
" BE CAREFUL OF WHAT YOU WISH FOR ! YOU MIGHT GET IT !!" .
4). பெரியவர்களுக்கு ஒரு சிறு குறிப்பு
அட்வைஸ் கொடுக்கிற mode ல் நான் இருப்பதால், இங்கு என்னைப் போன்று வயதானவர்களுக்கும் சேர்த்து ஒரு நடைமுறை அட்வைஸை கொடுத்து விட்டு செல்லாம் என்று நினைக்கிறேன்.
நான் ஒரு பெரிய குடும்பத்தைச் சார்ந்தவன். அண்ணன், தம்பி, பங்காளி, பகுத்தாளி, மாமன், மச்சான் என்று எனக்கு ஏகப் பட்ட உறவினர்கள். இந்த மாதிரியான சூழ்நிலையில் குடும்பம் சமமந்தப் பட்ட எந்த பிரச்சனையிலும் "அடுத்து என்ன செய்வது?" என்கிற முடிவுகளை எடுப்பது எனக்கு பலகாலமாக பெரும்பாடாகவே இருந்து வந்துள்ளது.
இந்த மாதிரி ஒருமுறை சுற்றங்கள் சம்மந்தப் பட்ட குடும்ப பிரச்சனைகளுக்கு முடிவு காண முடியாது நான் தவித்து நின்ற நிலையில் "நாளை நாம் மண்டையை போட்டால், அதற்கு பிறகு என்ன ஆகும்?"என்று எனக்கு நானே ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டேன்..
அடுத்து அந்த கேள்விக்கு பதில் என்ன என்று யோசிக்க ஆரம்பித்த உடனேயே, மேற்குறிப்பிட்ட அந்த விவகாரம் குறித்து நான் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெள்ளத் தெளிவாகி விட்டது.
பிரச்சனைகள் பெரிதாக உருவெடுத்து, அதற்கு முடிவெடுக்க முடியாத நிலையை நீங்கள் எதிர் கொண்டால், இதே கேள்வியை நீங்களும் கேட்டு பாருங்கள் ( 'நெருப்பு' எனற சொல்லும் சொல் ஒன்றும்சுட்டு விடாது. தைரியமாக கேட்டு பாருங்கள் ). எவ்வளவு சிக்கலான பிரச்சனைக்கும் உங்களுக்கு உடன் பதில் கிடைத்து விடும். வாழ்க்கையின் எல்லா பரிநாமங்களையும் மிஞ்சியது மரணம் ஒன்றுதான். எந்த நிமிடத்திலும் நிகழக் கூடிய அந்த மரணத்தை நினைவு கூர்ந்த மறு நிமிடமே மனத்தில் குப்பையும் கூழமுமாக பல காலம் தேங்கி கிடந்த சில்லரை 'அல்து பல்து' விஷயங்கள் யாவும் சிதறி ஓடி, மனம் தெளிவாகி 'நமக்குஇது தான் முக்கியம்' என்பது ஆணி அடித்தது போல் புரிந்தும் விடும்.
சாமான்யன்






